ARTICLE AD BOX
திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்படுவது வழக்கம்.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.
இதையும் படிக்க: தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் இன்று(மார்ச். 6) காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது.
மருளாளி அவற்றின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தது பரவசத்தை ஏற்படுத்தியது. முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டுக் குட்டியின் ரத்தத்தைக் குடித்தார். குட்டிக்குடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
புத்தூர் பகுதி முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கத்தினர் சார்பில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள் போடப்பட்டு வருகிறது.