தமிழ்நாடு மின் வாரியத்தில் 30 ஆயிரம் கேங்மேன் காலிப்பணியிடம்.! எப்போது நிரப்பப்படும்.?

3 hours ago
ARTICLE AD BOX

TNEB-ல் 50,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 30 ஆயிரம் கேங்மேன் காலிப்பணியிடம்.! எப்போது நிரப்பப்படும்.?

நாள் தோறும் லட்சக்கணக்கனோர் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். அந்த வகையில் வேலை வாய்ப்பை உருவாக்க தமிழக அரசு பல்வேறு தனியார் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அரசு துறைகளிலும் பல லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக அரசு பணிகளில் தொய்வும், கூடுதல் பணி சுமையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

50ஆயிரம் பணியிடங்கள் காலி

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், , மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுவாக்குதல், மின் பகிர்மானத்தை விரிவாக்குதல், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
 

கேங்மேன் பணியிடங்கள்

இதில், கிட்டத்தட்ட முப்பதாயிரம் கேங்மேன் பணியிடங்கள் அடக்கம். இதன் காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும்,  பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியர்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும், அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
 

காலிப்பணியிடங்களை நிரப்ப தயக்கம்

இந்தச் சூழ்நிலையில், முப்பதாயிரம் கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய இடத்தில், வெறும் ஐந்தாயிரம் கேங்மேன்களை நிரப்ப தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அந்த அனுமதியைக்கூட தர அரசு தயக்கம் காட்டுவதாகவும் தெரிய வருகிறது. 

அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. மின் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்திவிட்டு, அதற்குரிய சேவையையும் செய்யாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த நிலை நீடித்தால், தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும்.

உடனே காலிப்பணியிடங்களை நிரப்பிடுக

மின்சாரத் தேவைக்கும், மின்சார விநியோகத்திற்குமான இடைவெளி என்பது எதிர்பார்ப்பினைவிட அதிகரித்துக் கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில், செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும்.


எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள முப்பதாயிரம் கேங்மேன் காலிப் பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

Read Entire Article