ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்.. மார்க் ஆண்டனியை தெரியுமா!.. மகா நடிகன் ரகுவரன்!
சென்னை: தமிழ் சினிமாவில் இவர் பெயரை சொல்வதை விட அவர் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்கள் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. திரையில் வில்லன், நிஜத்தில் குழந்தை, பழகி பார்ததால் என்னப்பா இப்படிப்பட்டவரா என்று பிரம்மிப்பை தருபவர் ரகுவரன். ரகுவரன் என்றதும் I know என்ற வசனமும் நினைவுக்கு வரும். அவர் ஏற்று நடிக்கும் நடிக்கும் வேடம் சிறிதே பெரிதோ என்பது முக்கியம் இல்லை, ரகுவரன் என்ற வித்தகன் வந்தால் ஒரு மேஜிக் தான். வில்லன், குணச்சித்திரம், நாயகன், நண்பன் என பல வேடங்களில் அசத்தியிருந்தாலும், சிறு வயது மரணம் ஏற்க முடியாதது. ரசிகர்களுக்கு பிடித்த வில்லன்களில் ரகுவரன் இடம்பிடித்துவிடுவார். அது ஒரு மேஜிக் தான்.
ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்த ரகுவரனுக்கு அடுத்தடுத்து படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ரஜினியுடன் சேர்ந்து ராஜா சின்ன ரோஜா, சிவா, பாட்ஷா, அருணாச்சலம், சிவாஜி என பல படங்களில் நடித்துள்ளார். பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து மிரட்டியிருப்பார். இன்றைக்கும் அந்த கதாப்பாத்திரத்தை யாராலும் ரீ கிரியேட் செய்ய முடியாது. ஆன்.. ஆன்.. தம்பி பாட்ஷா நீ தொழிலுக்கு புதுசு என்று கூறுவதாக இருக்கட்டும், க்ளைமாக்ஸில் ஆட்டோ ஓட்டுறதால பழைய தொழிலை மறந்திருப்பேன் நினைத்தேன் என்றும் கூறும்போதும் இவர்தான் யா அக்மார்க் வில்லன் என நிரூபித்துக் காட்டியிருப்பார்.

வித்தியாசம் காட்டிய ரகுவரன்: ஒரு படத்தில் வரும் அதே கதாப்பாத்திரத்தை மீண்டும் நியாபகம் படுத்தும் அதே அலுத்து போகும் காட்சிகளில் நடித்து ரசிகர்களை போர் அடிக்க வைக்காத வில்லன் ரகுவரன். அதற்கு சின்ன எடுத்துக்காட்டு தெலுங்கில் வெளியான சிவா திரைப்படம் டிரெண்ட் செட்டை உருவாக்கியது. முதல் முறையாக நாகர்ஜூனாவை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பிரேக்கை தந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் பவானியாக மிரட்டியிருப்பார். ஒரு வில்லன் கத்தி கூச்சலிட்டு, பெரிய தாடி, மீசை வைத்து கொண்டு கேங்ஸ்டராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கிளின் சேவ் பார்க்க நல்ல பையன் மாதிரி இருந்து கொண்டு இருந்த இடத்தில் ரவுடிகளை கட்டி ஆளும் ரியல் கேங்ஸ்டராக மிரட்டியிருப்பார் ரகுவரன்.
புகை பிடிக்காமல், மது அருந்தாமல் வில்லத்தனத்தை தனது கண்களால் மிரட்டி காட்டியிருப்பார். தமிழ் சினிமாவின் மகா நடிகன் என்றே கூறலாம். ரகுவரன் நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது புரியாத புதிர். ஒரு சைக்கோவை திருமணம் செய்யும் ரேகா. மனைவி மீது சந்தேகப்படும் ரகுவரன் என படத்தின் காட்சிகள் பதற வைக்கும். I know, ஹேய்... ஐ நோ, ஐ நோ என்ற ஒரு வசனத்தில் எத்தனை வித்தியாசம் தர முடியுமோ அத்தனையும் தந்து ரசிக்க வைத்திருப்பார். நகத்தை கடித்து கொண்டும், சைக்கோவாக சிரித்தும், மிரட்டும் கண்களால் வில்லத்தனத்தை காட்டியிருப்பார். ஒரு படம் பார்த்தால் நிச்சயம் அவர் நடிப்பை மறந்து அவரை கொல்ல தோன்றும் அளவிற்கு பார்வையாளர்களுக்கு கோபம் வரும். இரணியன் படத்தில் மிராசுதாரராக வரும் ரகுவரன் அங்கிருக்கும் அடிமை மக்களை சாணிப்பால் ஊத்தி கொல்லும் போதும் சரி, சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வது போன்ற காட்சிகளை பார்த்தால் ரகுவரனை மறந்து அந்த கதாப்பாத்திரத்தின் மீது கோபம் கொப்பளிக்கும்.

அவர் வயதிற்கு ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால், நடிப்பு அசுரன் என்றால் ரகுவரன் தான் என ரசிகர்களே வியந்து பேசியுள்ளனர். அவர் நடித்த டாப் லிஸ்டில் பாட்ஷா, முதல்வன், சிவா, அருணாச்சலம், இரணியன் படங்களை தெரிவிப்பார்கள். முதல்வன் படத்தில் பேசும் வசனங்களை பார்த்தால் இது ரகுவரன் தான் பேசினாரா என்பதே ஆச்சர்யத்தை அளிக்கும்.
முதல்வன் அரங்கநாதன்: தமிழில் எத்தனையோ நடிகர்கள் அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். முதல்வன் படத்தில் இடம்பெற்ற அரங்கநாதனை யாராலும் மறக்க முடியாது. தனது உடல் அசைவிலேயே அசாத்திய நடிப்பை தந்தவர் ரகுவரன். நான் உட்கார்ந்திருக்கிற நாற்காலில நாலு கால் என்னோடது இல்ல. ஒரு கால் கூட்டணிக் கட்சி. ரெண்டாவது கால் சாதிக்காரனோடது, மூணாவது கால், நாம ஆட்சி நடத்த பணம் தர்றானே. பணக்காரங்க.. அவங்களோடது. நாலாவது கால் நம்ம தொண்டர்கள்து.. இதுல ஒரு கால் போனாலும் நம்ம மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். இந்தப் பிரச்சினையை தீர்க்கக்கூடாது. இதை வெச்சு அரசியல் பண்ணனும் என்று கொளுந்து விட்டு எரியும் சாதிக்கலவரத்தை அடக்காமல் உண்மையான அரசியல்வாதியின் சிந்தனையாளனாக இருந்து அந்த கதாப்பாத்திர்த்தை கையாண்டிருப்பார். இவரே பாம் வைப்பாராம், எடுப்பாராம், யோவ் முடியுமா.. முடியாதா? என்ற வசனங்கள் மீம்ஸ் மெட்டீரியலாகவே மாறியது.
மெத்தட் ஆக்டிங்: ரகுவரன் ஒரு படத்திற்கான கதாப்பாத்திரமாக தனது வீட்டிலும் இருப்பார் என்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. இதுகுறித்து ரகுவரனின் மனைவி ரோகினியே தெரிவித்துள்ளார். திருமணம் நடந்து முடிந்து 4 மாதத்தில் ஒரு வித்தியாசமான உடை அணிந்து அதேபோன்று பேசுவதும், சாப்பிடுவதை பார்த்து எனக்க பயம் வந்துவிட்டது. அதை பார்த்து அவரது அம்மாவிடம் கேட்டேன் இப்ப எதுவும் ஒரு படத்தில் நடிக்கிறானா என்று கேட்டதும் ஆமா என்றேன். பயப்படாத அவன் அப்படித்தான் நீதான் பொறுத்துக்கனும் மா என அத்தை கூறியதும் பிறகு ரகுவரனை புரிந்துகொண்டேன் என ரோகினி தெரிவித்தார். இப்படித்தான் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாதிரங்களுக்கு மெத்தட் ஆக்டிங்கை பாலோ செய்தார்.

குணச்சித்திரம்: அஜித் நடித்த படங்களிலேயே முகவரி படத்தை யாராலும் மறக்க முடியாது. இப்படத்தில் அண்ணனாக வரும் ரகுவரனை போன்ற ஒரு அண்ணன் நமக்கு கிடைக்கமாட்டாரா என ஏங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தம்பியின் கணவை நிறைவேற்ற குடும்பமே தியாகம் செய்வதை காட்டிலும் ஒரு அண்ணனின் தவிப்பு அளப்பறியது. நிலாவே வா படத்தில் நா நம்ம ஊரு சரக்கு அடிக்க மாட்டேன். அதுல அதிகம் கலப்படம். அதனால் தான் பாரின் சரக்கு அடிப்பேன் என்று கூறும் ரகுவரன் தான், லவ் டுடே படத்தில் விஜயிடம் டேய் இந்த அப்பா வேணுமா அந்த பொண்ணு வேணுமா என்று கேட்பார்.

அதே ரகுவரன் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷூக்கு தந்தையாக நடித்து எல்லோரையும் அழ வைத்துவிட்டு சென்றுவிட்டார். தந்தை என்றால் இப்படி இருக்கனும். குடித்துவிட்டு காசு கேட்கும் பையனிடம் நீங்கலாம் கொள்ளி போடத்தான் லாய்க்கு என்று கூறிவிட்டு மகன் சம்பாதித்த பணத்தை கொடுக்கும்போது நான் யார் தயவிலும் வாழ மாட்டேன் என கம்பீரமாக பேசும் வசனமாக இருக்கட்டும் அனைத்தும் கண்ணீரில் கரையவைத்துவிட்டன. அதே மகன் காதலில் தோல்வியில் வாடும் போதும் சரி அனைத்திலும் ரசிக்க வைத்திருப்பார் ரகுவரன். தனுஷை பார்க்கும் போது அவரது மகன் ரிஷிதான் நாபகத்திற்கு வந்ததாக அவரே தெரிவித்தாராம். அதனல் என்னவே தனுஷ் ரகுவரனை அப்பா என்றே அழைத்தாராம். விஐபி படத்தில் கூட ரகுவரன் என்ற கதாப்பாத்திரம் உருவானது. தமிழ் சினிமாவில் ரகுவரனுக்கு தனித்த அடையாளம் கிடைக்கவில்லை பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. ரகுவரன் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ளதாக ரோகினி அறிவித்திருக்கிறார். கண்டிப்பாக ரகுவரனை மீண்டும் திரையில் காண காத்திருப்போம்.