ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாவேந்தன் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
’தந்தை பெரியாரின் கொள்கை ஓங்குக’ எனும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறாக பேசிவருகிறார்; முன்னுக்குப் பின் முரணாக தொண்டர்களை அரவணைக்காமல் செயல்படுகிறார்; உறுப்பினர்களின் கருத்தைக் கேட்காமல் செயல்படுகிறார் என பாவேந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சியிலிருந்து தான் மற்றும் பொறுப்பில் உள்ள 100 பேர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 347 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 9656 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ள வருகை தர உள்ள நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியிலிருந்து விலகியதன் காரணம் குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த அவர், “பெரியாரையும் தமிழ்த்தேசியத்தையும் எதிரெதிராக நிறுத்துவது தமிழ் நிலத்திற்கு பேராபத்தாக முடியும். தமிழ்த்தேசியக் களத்தில் அவரது சிந்தனை மாறிவருகிறது என அனைவரும் தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். கட்சி என்பது தொண்டர்கள்தான். தொண்டர்கள் இல்லாமல் கட்சியை மட்டும் கொண்டு சென்று எங்கும் வெல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.