ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது கட்சியின் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடலையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, அதே மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை நடத்தினார்.
இந்த மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், கடந்த டிசம்பரில் சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொண்டார். மாநாட்டிற்கு பிறகு அவர் ஏறிய முதல் பொதுமேடை அதுவாக இருந்தது. இந்த விழாவில் அவர் பேசியதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதன் எதிரொலியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் த.வெ.க-வில் இணைந்த நிலையில், அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய்யின் த.வெ.க அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். இதனிடையே, த.வெ.க நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. அங்குள்ள 'கான்புளுயுன்ஸ்' ஓட்டலில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் விஜய் பங்கேற்று பேசுகிறார்.
அப்போது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதனால் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி நிர்வாகிகளுடன் புதிதாக போடப் பட்ட 28 அணிகளின் நிர்வாகிகளும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
ரங்கசாமி பதில்
இந்நிலையில், நாளை மகாபலிபுரத்தில் நடக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து புதுச்சேரி சட்டசபை அலுவலகத்தில், முதலமைச்சர் ரங்கசாமியிடம் த.வெ.க கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். த.வெ.க கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன்" என பதில் அளித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.