ARTICLE AD BOX
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது பனிக்காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து கோடை காலம் தொடங்க உள்ளது. இதன் காரணமாக காலை நேரங்களில், லேசான மூடி பனி நீடித்து வரும் நிலையில், காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரி்க்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விடவுமு் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானவது வரை மழையும் பெய்து வருகிறது.
இதனிடையே, இன்று முதல் வரும் மார்ச் 2-ந் தேதி வரை, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர, மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் இன்று (பிப்ரவரி 27) தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (பிப்ரவரி 28) மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வரும் மார்ச் 1-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.