இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-இல் மனித வளத்துறைக்கான தலைவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் சந்தை மூலதன அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவின் நம்பர் ஒன் ஐஐ நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் மனிதவளத் துறை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். மார்ச் 14ஆம் தேதி முதல் சுதீப் குன்னுமால் மனித வளத்துறைக்கான தலைவராக செயல்படுவார் என அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி அவர் மார்ச் 14ஆம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மனிதவளத்துறை தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக டிசிஎஸ் நிறுவனம் இந்த தகவலை மும்பை பங்குச்சந்தையில் தெரிவித்திருந்தது. தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவராக இருக்கக்கூடிய மிலிந்த் லக்காட் ஓய்வு பெற இருக்கிறார். இதனை அடுத்து அவருடைய பதவிக்கு சுதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மிலிந்த் லக்காட் டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவராகவும் , நிறுவன செயல்பாட்டு துணை தலைவராகவும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலம் பணிபுரிந்து வந்தவர். 1987 ஆம் ஆண்டு டிசிஸ் நிறுவனத்தில் ஒரு டிரெயினியாக பணிக்கு சேர்ந்தவர்.
கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி படிப்படியாக முன்னேறி வந்து மனித வள துறைக்கான தலைவர் என்ற உச்சத்தை அடைந்தார். தற்போது இவர் ஓய்வு பெறுவதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தில் பேங்கிங், பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் இன்சூரன்ஸ் வெர்டிகல் பிரிவுகளின் தலைவராக இருந்த சுதீப் குன்னுமால் மனிதவளத் துறை தலைவராக பதவி ஏற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அவர் வெள்ளிக்கிழமை அன்று அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். 2000 ஆம் ஆண்டிலிருந்து அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
Written by: Devika