<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>தங்க மோதிரம்</strong></p>
<p style="text-align: justify;">மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் ஜெயலலிதா பிறந்த நாளான்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்ததோடு, அங்குள்ள உள் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;"><strong>சென்னை:</strong> 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p>
<p style="text-align: justify;">இதனை தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</strong></p>
<p style="text-align: justify;">“மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் “அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளில், அவரின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p>
<p style="text-align: justify;">“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் @AIADMKOfficial மக்களுக்காகவே இயங்கும்” என்று அவர் சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் அவரின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!” என பதிவிட்டுள்ளார்.</p>