ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம கொள்ளை மற்றும் கல்குவாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் எனப் பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்தார்.
இந்நிலையில்தான், ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதித் திட்டம் தீட்டப்பட்டு, 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை முதலில் திருமயம் காவல்துறையினர் விபத்து வழக்காகப் பார்த்த நிலையில், ஜகபர் அலியின் மனைவி மரியம் மற்றும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். இதனால், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், துலையானூர் அருகே உள்ள வளையன்வயலைச் சேர்ந்த ஆர்.ஆர். குரூப்ஸ் குவாரி உரிமையாளர்களான ராமையா, ராசு, ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுக் கடந்த சில தினங்களாக இந்த வழக்கை அவர் விசாரணை செய்து வருகிறார். அதோடு, இந்த வழக்குத் தொடர்பாகக் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலியின் மனைவி மரியம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், ஜகபர் அலியின் உடற்கூறு ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் சாட்சியங்களையும், தடயங்களையும் முறையாகச் சேகரிக்கவில்லை.
அதனால், இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறுமா என்ற ஐயப்பாடு இருப்பதாகவும், அதனால் உயிரிழந்த ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து முழு வீடியோ பதிவுடன் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஜகபர் அலி உடலை மீண்டும் தோண்டி எடுத்து அதே இடத்தில், திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்போடு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடலை எக்ஸ்ரே செய்துவிட்டு எக்ஸ்ரே செய்த படம் மற்றும் அறிக்கையை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஜகபர் அலி உடல் தோண்டி எடுக்கும் போது முழுமையாக அந்த இடம் மறைக்கப்பட்டு, யாரையும் புகைப்படமோ, வீடியோ காட்சியோ பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. மேலும், அங்கு எடுக்கப்படும் எக்ஸ்ரே படம் மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்படும் வீடியோ காட்சி ஆகியவை வழக்கு விசாரணையைத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். அதோடு, ஜகபர் அலியின் மனைவி மரியம் கேட்டிருந்த மறு உடற்கூராய்வுக்கு அவர் உத்தரவிடவில்லை.
இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி, வெங்களூர் கிராமத்தில் திருமயத்திலிருந்து கோனாபட்டு செல்லும் சாலையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்திற்குச் சொந்தமான முஸ்லிம் கபர்ஸ்தான் என்ற இஸ்லாமிய அடக்க ஸ்தலத்தில் புதைக்கப்பட்ட ஜகபர் அலியின் உடல் திருமயம் வட்டாட்சியர் ராமசாமி முன்னிலையில், சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அவரது குழுவினர் மற்றும் பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பில் தோண்டி எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி முழுவதும் தார்பாய்கள் கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டு, அந்த இடம் அமைந்துள்ள இரு சாலைகளிலும் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு பேரிக்காடுகள் வைத்து பொதுமக்கள், ஊடகத்துறையினர் என யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருப்பதற்கு 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், தோண்டி எடுக்கப்பட்ட ஜகபர் அலியின் உடலைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு மருத்துவர் மதன், ஏற்கனவே ஜகபர் அலியின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர், எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஜகபர் அலியின் உறவினர்கள் முன்னிலையில் எக்ஸ்ரே செய்தனர். பின்னர், ஜகபர் அலியின் உடல் அதே இடத்தில் மீண்டும் அவரது உறவினர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த பணி மாலை 4:30 மணி வரை சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்றது.
ஜகபர் அலி உடலில் எந்தெந்த பாகங்கள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளன, அதில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது என்பன குறித்த அறிக்கையை எக்ஸ்ரே எடுக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்த படத்தை பிரிண்ட் அவுட் செய்து பின்னர் அதற்கான அறிக்கையைத் தயார் செய்து நீதிமன்றம் கூறியது படி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு: ’குவாரியில் தவறு நடந்திருப்பது உண்மை’-ஆய்வில் உறுதிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs