ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள வீடுகளில் செல்லப்பிராணியாக பூனை, நாய், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை வளர்க்கப்படுகிறது. இவை உரிய பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் விடப்படுவதால் விபத்துகளும், அசம்பாவிதங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதாவது, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதற்கு கட்டணம் விதித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், ஒரு முன்மாதிரி திட்டமான வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கட்டணம் விதித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாடு வளர்க்க ரூ.500 கட்டணம், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் அதிகளவு செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல், மற்ற பிராணிகள் வளப்பதற்கு உரிமை தொகை கட்ட வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே செல்லப்பிராணிகள் வளர்க்க 10 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது செல்லப்பிராணி மற்றும் வீட்டு விலங்கு வளர்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.