ARTICLE AD BOX
சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. நகரப் பகுதிகளுக்குள் பத்து கிலோ மீட்டர் பயணிக்க ஒரு மணிநேரத்துக்கு மேலாகிறது.
அதிகளவிலானோர் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனத்தில் பயணிப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணமாக உள்ளது.
இதையும் படிக்க : சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!
இதனிடையே, குடியிருப்புப் பகுதிகளில் கார்களை நிறுத்த இடமின்றி சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதால் பலருக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் காவல்துறைக்கு வந்துகொண்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக, இனி சென்னையில் கார் வாங்குவோர் சொந்த நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற விதிமுறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது.
புதிதாக கார் வாங்குவோர், காரை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் குறித்த சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார் வாங்குபவர்கள், எத்தனை கார் வாங்குகிறார்களோ, அதற்கான நிறுத்துமிடச் சான்றிதழ் வழங்குவது அவசியம்.
புதிய விதிமுறைகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.