ARTICLE AD BOX
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம். (71). முதியவரான இவர், சென்னை தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அப்போலோ குழுமத்திற்குச் சொந்தமான பழமையான கட்டடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அவர் தங்கி இருந்த அறை திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து காவலாளி மாணிக்கம் தீயில் கருகி இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த மாம்பலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தீக்காயத்துடன் இறந்து கிடந்த அவர், தீ விபத்தில் இறந்து இருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிகரெட் பிடித்துக் கொண்டே மாணிக்கம் படுத்து உறங்கிய போது பஞ்சு மெத்தை எரிந்து தீ விபத்தில் இறந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.