ARTICLE AD BOX
பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்கள் என என்று வேண்டுமானாலும் செய்து சாப்பிட ஏற்றது சுருள் போலி. உள்ளே வைக்கப்படும் பூரணத்தைக் பொறுத்து இது மாறுபடும். கடலை பருப்பு போலி பூரண் போலி என்று அழைக்கப்படுகிறது. அதற்கு பதில் தேங்காய், நாட்டுச்சர்க்கரை மற்றும் முந்திரி ஆகியவை கொண்ட ஸ்டஃபிங் செய்த போலியை சுருட்டி வைத்து சுருள் போலி என்று அழைக்கிறார்கள். இது அல்லாமல் மசாலா போலியும் உள்ளது. அதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலா வைத்து தயாரிக்கப்படுகிறது. இதை கோதுமை மாவில் செய்யும்போது, அதன் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது. எனவே இந்த போலிகளை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இங்கு உங்களுக்காக சுருள் போலி செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
• கோதுமை மாவு – ஒரு கப்
• சூடான பால் – அரை கப்
• உப்பு – கால் ஸ்பூன்
• நெய் – தேவையான அளவு
• பூரணத்துக்கு தேவையான பொருட்கள்
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
• முந்திரி – 20
• ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
• குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
• பிரவுன் சுகர் – அரை கப்
• நெய் – தேவையான அளவு
செய்முறை
• முதலில் மாவில் சிறிது உப்பு மற்றும் நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் விட்டு பிசைந்துகொள்ளவேண்டும். நல்ல மாவு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும். மாவை காய்ந்து விடாமல் தடுக்க நெய் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவேண்டும். இதை அரை மணி நேரம் துணியைப்போட்டு ஊறவிடவேண்டும். மீண்டும் எடுத்து பிசைந்து எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். அந்த உருண்டைகளையும் துணி போட்டு மூடிவைக்கவேண்டும். எப்போதும் மூடி வைப்பதற்கு மாவு காய்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணம்தான் உள்ளது.
• ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்து அதை பொடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். தேங்காயை வறுக்க நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு, பிரவுன் சுகர், ஏலக்காய்ப் பொடி, குங்குமப்பூவை சேர்த்துக்கொள்ளலாம். இவையனைத்தையும் கலந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
• சப்பாத்தி கல்லில் மாவை சேர்த்து உருண்டைகளை வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும். கையிலும் தட்டலாம். ஆனால் தேய்த்து எடுத்தால் சரியான அளவு வட்டங்களாக வரும். இதை நெய் சேர்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வாட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். மொறுமொறுவென்று மாறிவிடக்கூடாது. இதை எடுத்து தட்டில் வைத்து காய்ச்சி ஆறவைத்த பாலை அதன் மேல் தடவவேண்டும். இப்படி செய்யும்போது உங்களுக்கு சுருள் போலியை சுருட்ட வசதியாக இருக்கும்.
• போலியின் மேல் கால் கப் அளவுக்கு அரைத்த பொடியை எடுத்து தூவிவிடவேண்டும். இப்போது ஒரு புறத்தில் இருந்து அடுத்த புறத்துக்கு நன்றாக சுருட்ட வேண்டும். அப்படியே சுருட்டி அரை மணி நேரம் வைத்திருந்தால், அனைத்து பொருட்களும் பாலுடன் சேர்த்து போலியில் ஊறி சுருள் போலி சுவையாக இருக்கும். அரை மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட சுவை அள்ளும்.
இன்னொரு முறையிலும் இதை சாப்பிடலாம்
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால் அதில் சர்க்கரை அல்லது தேன் கலந்து ஏலக்காய்ப்பொடி தூவி அதில் இந்தப்போலியை சேர்த்து ஊறவைத்தும் சாப்பிடலாம். நெய்யை அளவாக சேர்ப்பது நல்லது. அதிகமானால் திகட்டும். சாப்பிட முடியாது. குழந்தைகள் விடவே மாட்டார்கள். விரும்பி உண்பார்கள். பெரியவர் மற்றும் வயோதிகர்களுக்கு நல்ல ஊறவைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மைதா மாவிலும் செய்யலாம். ஒருமுறை ருசித்தால், அடிக்கடி செய்வீர்கள். செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்