சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேருக்கு 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வீட்டில் சம்மன் ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன்? என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்றபோது, அங்கிருந்த காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், காவலாளியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், அவரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சீமான் வீட்டில் இருந்த காவலாளி மற்றும் உதவியாளர் மீது போலீஸ் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. இதன்படி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொரு புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சீமான் வீட்டில் கைதான காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை சோழிங்கநல்லூர் நீதிபதி கார்த்திகேயன் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

துப்பாக்கி வைத்திருந்த காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும், சம்மனை கிழித்த சுபாகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் மார்ச் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


Read Entire Article