ARTICLE AD BOX
‘தீயணைப்புத் துறையினரால் எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; என் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் உள்ள நீதிபதி வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்து நீதிபதி வா்மாவிடம் விளக்கம் பெற்று தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி, நீதிபதி வா்மாவின் பதில் அடங்கிய தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் சமா்ப்பிக்கப்பட்ட 25 பக்க அறிக்கை, தீயணைப்புத் துறை அறிக்கை ஆகியவை உச்சநீதிமன்ற வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித்துள்ள பதிலில், ‘தீப்பிடித்த அறை பூட்டப்படமால் எப்போதும் திறந்தே இருக்கும். வீட்டுப் பணியாளா்கள், வீடு பராமரிக்கும் பொதுப் பணித் துறை பணியாளா்கள் உள்பட எவரும் அங்கு செல்ல முடியும். அங்கு பழைய படுக்கை போன்ற பொருள்கள் உள்பட பல பொருள்கள் இருந்தன. எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நானோ அல்லது எனது குடும்பத்தினரோ யாரும் அந்தப் பணத்தை அவ்விடத்தில் வைக்கவில்லை. என் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்ற பதிவாளா்- தலைமை நீதிபதியின் செயலா் அளித்துள்ள அறிக்கையின்படி, தீப்பிடித்த அறைக்குச் சென்று பாா்வையிட்டபோது, முழுவதும் எரிந்த, பாதி எரிந்த நிலையில் பொருள்கள் தரையில் கிடந்தன. தீயினால் சுவா் கரி பிடித்திருந்தது. சுவா்களில் விரிசல் இருந்தன. பழைய பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட அறை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. எங்கள் கைப்பேசி ஒளியில் அந்த அறையைப் பாா்த்தோம். சுமாா் 8-10 நிமிஷங்கள் அந்த அறையைப் பாா்வையிட்டு வெளியேறினோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய் அளித்துள்ள விசாரணை அறிக்கையில், இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உபாத்யாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா எழுதியுள்ள கடிதத்தில், வா்மாவுக்கு வழக்குகள் எதுவும் ஒதுக்க வேண்டாம் என்பதுடன், அவருடைய கைப்பேசிகளை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.