ARTICLE AD BOX
பாதாம் பருப்பு (Almonds) நம் அறிவாற்றலை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஓர் உணவு. இது குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும் ஒரு சிறந்த உணவாகும். ஆல்மண்ட் உபயோகித்து ஆரோக்கியம் நிறைந்த சட்னி தயாரிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆல்மண்ட் சட்னி ரெசிபி
தேவையான பொருள்கள்:
1.பாதாம் பருப்புகள் ½ கப்
2.தேங்காய் துருவல் ½ கப்
3.காஷ்மீரி ரெட் சில்லி 5
4.புளி பேஸ்ட் 1 டீஸ்பூன்
5.சீரகம் ½ டீஸ்பூன்
6.பெருங்காயம் ஒரு சிட்டிகை
7.உப்பு தேவையான அளவு
8.தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
9.தண்ணீர் ½ கப்
10.கறிவேப்பிலை ஒரு இணுக்கு
11.உளுத்தம் பருப்பு ½ டீஸ்பூன்
12.கடுகு 1 டீஸ்பூன்
13. இஞ்சி துருவல் ½ டீஸ்பூன்
செய்முறை:
தண்ணீரை சூடாக்கி அதில் ஆல்மண்ட்களைப் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி நீக்கிவிட்டு பாதாம் பருப்புகளின் தோலை உரிக்கவும். உரித்த பாதாம் பருப்புகளை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 4 மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, புளி பேஸ்ட், இஞ்சி துருவல், சீரகம் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் வரை அரைக்கவும். பிறகு அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஒரு பானில் (pan) தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, ஒரு மிளகாய் ஆகியவற்றை தாளித்து சட்னியில் கொட்டவும். சுவையான ஆல்மண்ட் சட்னி தயார்.
ஆல்மண்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் E கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும். பாதாம் மற்றும் தேங்காயில் உள்ள நார்ச் சத்துக்கள் இரைப்பை குடல் ஆரோக்கியம் காக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
ஆல்மண்ட் சட்னியை தோசை மற்றும் இட்லியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுத்து வரலாம். இதனால் அவர்கள் ஞாபக சக்தி பெருகும். உடல் வளர்ச்சியும் சீரான முறையில் நடைபெறும்.