ARTICLE AD BOX
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததால், கேண்டீன் உரிமையாளர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மிகவும் பழமையான தியேட்டர்களில் ஒன்று ஆல்பர்ட் தியேட்டர். சமீபத்தில் இந்த தியேட்டரில் படம் பார்க்க வந்த ஒருவர் கேண்டீனில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியுள்ளார். இந்த உணவுப் பொருட்கள் காலாவதியான நிலையில், இதுகுறித்து அவர் கேண்டீன் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான குழுவினர், ஆல்பர்ட் திரையரங்க கேண்டீனை சோதனை செய்தபோது காலாவதியான குளிர்பானங்கள், உணவுப்பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் கேண்டீன் உரிமையாளரின் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்க கேண்டீன்களில் சோதனை நடத்த உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.