ARTICLE AD BOX
ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதன்முறையாக இந்த மர்ம நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. இதுவரையில் 419 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மர்ம நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்று சிறுவர்கள் வவ்வாலை சாப்பிட்டதாகவும், அதையடுத்து தீவிர காய்ச்சல் ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் அந்த மூன்று குழந்தைகளும் இறந்தாகவும் அதுவே மர்ம நோய் பரவலுக்கான தொடக்கமாக இருந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகள் அதிகமாக உண்ணப்படும் இடங்களில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் வேகமாகப் பரவுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஆப்ரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு நோய்ப்பரவல் ஏற்படுவது 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த 2022-இல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
தற்போது பரவும் மர்மக் காய்ச்சல் கடந்த பிப். 9 அன்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 13 பேரின் மாதிரிகள் காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.அனைத்து மாதிரிகளையும் சோதனை நடத்தியதில் எபோலா, மார்பர்க் போன்ற ரத்தக்கசிவு நோய்த் தாக்குதல்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளன. சில மாதிரிகளின் சோதனையில் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவியது. குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில், நாட்டின் பான்சி சுகாதார மண்டலத்தில் மட்டும் அந்த நோய்க்கு 143 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. நாட்டில், கடந்த ஆண்டு, அக்டோபர் 29 முதல் இந்த நோய்க்குப் பாதிக்கப்பட்ட மக்களில் அப்போது 592 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தற்போது புதிய மர்ம நோய் உண்டாகியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.