ARTICLE AD BOX

ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல், மர்மமான முறையில் QR குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஸ்கேன் செய்த போது அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி வந்துள்ளது. இதனால் மக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் மியூனிக்கிலுள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.
இதுகுறித்து கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப் கூறியதாவது, இது மிகவும் விசித்திரமான சம்பவம். அந்த QR குறியீடுகளின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார். கல்லறைகள் இருந்து ஸ்டிக்கரை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இறுதியில் ஒரு தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து, பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அப்போது அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை என்பது அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தது. அந்நிறுவனத்தின் மூத்த மேலாளரான ஆல்ஃபிரட் ஜான்கர் கூறியதாவது, எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது.
அனைத்து வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். கல்லறைகளை பழுது பார்ப்பதற்கு கற்களை அகற்றி சுத்தம் செய்து அதன் பின் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்திற்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.