ARTICLE AD BOX
டெல்லி கருத்துக்கணிப்புகள்
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தநிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமர வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஒருவேலை பாஜக வெற்றி பெற்றால், அந்த வெற்றி எப்படி சாத்தியமாகி இருக்கும்? ஆத் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? பார்க்கலாம்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தமாக 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், தேர்தல் நாளான இன்று, வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
The Matrize நிறுவனம்
பாஜக 35 முதல் 40 இடங்களையும், ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களையும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
P-Marq நிறுவனம்
39 முதல் 49 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறலாம் எனவும், ஆம் ஆத்மி 21 முதல் 31 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Chanakya Strategies நிறுவனம்
பாஜக 39 முதல் 44 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், ஆம் ஆத்மி 25 முதல் 28 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
peoples pulse நிறுவனம்
ஆம் ஆத்மி 25 - 29 தொகுதிகளையும், பாஜக 40-44 தொகுதிகளையும் காங்கிரஸ் 0-2 தொகுதிகளையும் வெல்லும் என தெரிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் பாஜகவின் கை ஓங்கியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த வரி தொடர்பான அம்சங்கள் டெல்லி மக்களிடையே பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டது. டெல்லி தேர்தலில் இந்த அறிவிப்பு தாக்கத்தினை ஏற்படுத்தும் என அப்போதே அரசியல் விமர்சகர்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
"ஏழை மக்களை மிரட்டியுள்ளார்கள்?"
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக புதுதில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆய்வறிஞருமான ராஜன்குறை கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “நமக்கு விருப்பமில்லாத கருத்துக்கணிப்புகள் வெளிவந்தால் தேர்தல் முடிவு வரும்வரை காத்திருக்கலாம் என்றுதான் தோன்றும். இம்முறை பாஜக எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி வேலை செய்துள்ளனர்.
முக்கியமாக, அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா போன்றவர்களை கைது செய்து அவர்களது இமேஜை முற்றிலுமாக குழைத்துள்ளார்கள். அதைவிட மோசமானது ஏழை மக்களை மிரட்டியுள்ளார்கள் என தகவல் வருகிறது. கருத்துக்கணிப்புகளின்படியே முடிவுகள் வந்தாலும் அதில் வியப்பதற்கு வாய்ப்பில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலையும், மனீஷ் சிசோடியாவையும் கைது செய்தது அத்துமீறலின் உச்சம். ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் அதற்கு இதைத்தான் காரணங்களாகச் சொல்லமுடியும். ஆம் ஆத்மிக்கு தற்போதுவரை மக்களிடையே ஆதரவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்புகள் பொய்யாகவும் போகலாம். ஆம் ஆத்மி குறைவான மெஜாரிட்டியில் வெற்றி பெறலாம். முடிவுகள் வந்தபின்தான் எதையும் சொல்ல முடியும்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை உயர்த்தியதால் மட்டுமே பாஜக வெற்றி பெறாது. ஆம் ஆத்மி இருமுறை ஆட்சியில் இருந்ததால் அதிருப்தி வாக்குகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆம் ஆத்மிக்கு ஒருவகையில் மிடில் க்ளாஸ் வாக்காளர்கள் இருந்தாலும், அவர்களது அடித்தளம் அடித்தட்டு மக்களது வாக்குகள்தான். அடித்தட்டு மக்களுக்குத்தான் அவர்கள் அதிகமான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். இரண்டாம் முறை அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு இதுபோன்ற திட்டங்கள்தான் பெருமளவில் கைகொடுத்தது.
ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழல் செய்ததாக பாஜக இம்முறை கடுமையாக பரப்புரை மேற்கொண்டது. ஊழல் இல்லாதவர்கள் எனும் ஆம் ஆத்மியின் பெயரில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தினார்கள்.
சாதரணமாக செய்தித்தாள்களை வாசிப்பவர்களுக்கும், சட்டம் தெரிந்தவர்களுக்கும் கைது தொடர்பான விபரங்கள் தெரியும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதும் தெரியும். சாதாரண மக்களுக்கு இது ஊழல் என்றுதான் பதியும். மற்றவர்களைப் போல்தான் இவர்களும் ஊழல் செய்துவிட்டதாக எடுத்துக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.