ARTICLE AD BOX
Tirunelveli Retired Police Murder: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண்காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில். ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாகீர் உசேன் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திலும் இருந்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.