ARTICLE AD BOX
கணவாய் மீன்கள் ஸ்க்விட் மற்றும் ஆக்டோபஸ் வகுப்பைச் சேர்ந்த ஒரு விநோதமான கடல்வாழ் உயிரினமாகும். இரண்டு பெரிய கண்களைக் கொண்ட கணவாய் மீன்களால் தங்களுக்குப் பின்னல் இருக்கும் பொருள்களையும் பார்க்க முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்தில் இவை துல்லியமாக பார்க்கும் ஆற்றல் உடையவை.
கணவாய் மீன்களுக்கு மூன்று இதயங்கள் அமைந்துள்ளது என்பது வியப்பான ஒரு உண்மையாகும். இரண்டு இதயங்கள் செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்புகளுக்கு இரத்தத்தை செலுத்தும் பணியினையும் மற்றொரு இதயமானது உடலில் பிற பாகங்களுக்கு இரத்தத்தைச் செலுத்தும் பணியினையும் செய்கின்றன.
கடல் பச்சோந்திகள் என அழைக்கப்படும் இவைகளால் கடலுக்குள் வண்ணங்களைக் காண இயலும். மேலும் இவை தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண் சிமிட்டும் நேரத்தில் தங்கள் உடலின் நிறத்தை மாற்றும் ஆற்றலுடையவை.
நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட கணவாய் மீன் வகைகள் உள்ளன. இவை இருபது அங்குலம் முதல் ஒரு மீட்டர் நீளம் வரை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. சில கணவாய் மீன்கள் பத்து கிலோ அளவிற்கு எடை உடையவை.
இரண்டு நீளமான உணர்வு இழைகளையும் (Tentacles) எட்டு கைகளையும் கொண்ட இவை முதலில் உணர்வு இழைகள் மூலம் தங்கள் இரையைப் பிடித்து பின்னர் கைகளைக் கொண்டு இரைகளை உண்ணுகின்றன. உணர்வு இழைகளிலும் கைகளிலும் உறுஞ்சுவான்கள் (Suckers) உள்ளன.
இறால்கள் மற்றும் நண்டுகளை இவை மிகவும் விரும்பி உணவாகக் கொள்ளுகின்றன. சில சமயங்களில் தங்கள் இனத்தையே இவை உண்ணுகின்றன.
கணவாய் மீன்களின் இரத்தமானது நீல நிறத்தில் காணப்படுகிறது. இவற்றின் உடலில் உள்ள ஹீமோசயனின் (Hemocyanin) என்ற புரத்த்தின் காரணமாக நீல நிறத்தில் இவற்றின் இரத்தம் அமைந்துள்ளது.
கணவாய் மீன்களின் ஆயுட் காலம் மிகவும் குறைவாகும். இவை ஒரு ஆண்டு மட்டுமே உயிர் வாழ்கின்றன. சில வகைகள் மட்டும் இரண்டு ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
கணவாய் மீன்களின் மூளையானது உடல் அளவிற்கு ஏற்றவாறு இல்லாமல் அளவில் சற்று பெரியதாக உள்ளது. இவை துல்லியமான நினைவுத் திறன் கொண்டவை.
தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்க இவை ஆபத்துக் காலங்களில் செபியா (Sepia) எனப்படும் ஒரு மையினைத் தனது உடலிலிருந்து வெளியேற்றுகிறது. இந்த மையானது தண்ணீரில் கலந்து எதிரிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கும் சமயத்தில் இவை தப்பித்துக் கொள்ளுகின்றன.