ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் 49.5 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு 229 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்த நிலையில் அவரே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 51 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் அதில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக இந்திய அணி தரப்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்த வீரர் என்ற தவானின் வாழ்நாள் சாதனையை சுப்மன் கில் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.