ARTICLE AD BOX
ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கையில் கூறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக, நாள்தோறும் குறைந்தது 3 குழந்தை திருமணங்கள் நிகழ்த்தப்படுவதாக மாநில அரசின் தரவறிக்கை கூறுகிறது. 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக தரவு வெளிப்படுத்துகிறது.
அவற்றில் அதிகபட்சமாக 1,347 வழக்குகள் நபரங்பூரிலிருந்து பதிவாகியுள்ளன. குழந்தை திருமணங்களைத் தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு பிரசாரங்களையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
குழந்தை திருமண நடவடிக்கை குறித்து சமூக ஆர்வலர் நம்ரதா சதா கூறியதாவது, குழந்தைத் திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும். வயது குறைந்த குழந்தைகளை திருமணம் செய்வது பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகும்.
வழக்கமாக, புலம்பெயர் தொழிலாளிகளான தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், அல்லது புலம்பெயரும் இடத்தில் வேறு யாருடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாதிருப்பதற்காகவே, வயது குறைந்த பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் முடித்து வைக்கின்றனர். வரதட்சிணையும் ஒரு காரணமாக இருக்கலாம். மணமகளின் வயதுக்கேற்ப தேவை அதிகமாகும்; அதனால்கூட, சிறுவயதிலேயே சிலர் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இதையும் படிக்க: மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!
இதனைத் தடுக்க, அவர்களுக்கு முறையான கல்வி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், அவர்கள் சுயதொழில் செய்ய முடியும்; ஒரு பெண்ணின் எதிர்காலத்திற்கு திருமணம் மட்டுமே ஒரே படி என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.
குழந்தை திருமணம் பிரச்னை மட்டுமின்றி, குழந்தை தொழிலாளர் பிரச்னைகளையும் ஒடிசா அரசு எதிர்கொண்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 328 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.