ARTICLE AD BOX
அமெரிக்கா தனது ராணுவத்தை ஐரோப்பியத் தளங்களிலிருந்து திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஐரோப்பிய தளங்களில் நிலைநிறுத்தப்பட்டனர். தனது ராணுவத்தினை தற்போது அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நேட்டோவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், மறுஆயுத வங்கியின் மூலம் அரசின் நிதியைப் பயன்படுத்தி தனியார் ராணுவ முதலீட்டைப் பெருக்கவும், ஐரோப்பிய ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க | உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!
ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஐரோப்பாவில் இதுகுறித்த விவாதங்கள் எழுப்பப்பட்டு, வரவிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும், உக்ரைன் உடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக படைகளைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லப்பட்டாலும் இந்தோ- பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வரும் நிலையில் அதற்கான ஆயத்தமாக அமெரிக்கா ராணுவ பலத்தைப் பெருக்க முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
அதுமட்டுமின்றி நேட்டோவிலிருந்தும் அமெரிக்கா வெளியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அரசு செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க அரசு செயல்பட்டு வருவதால் ராணுவத்தைத் திரும்பப் பெறும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.