ARTICLE AD BOX

Image Courtesy: @KKRiders
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொள்ள உள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இவ்வாறு ஒரு அணி மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஐ.பி.எல். தொடங்க இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் டெல்லி மற்றும் கொல்கத்தாவின் கேப்டன்களாக யார் நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழும்பியது. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானே அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானேவை நியமித்து கொல்கத்தா நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் வெளியிட்டுள்ளார்.