ARTICLE AD BOX
உக்ரைனால் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கூா்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரா்கள் பல கிலோமீட்டா் பயணம் செய்துள்ளனா்.
ரஷியாவின் எல்லை மாகாணமான கூா்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் கடந்த ஆண்டு ஆகஸ்டில் எல்லை தாண்டி கைப்பற்றியது. கிழக்கு உக்ரைன் மீதான தொடா் தாக்குதல்களை நிறுத்த ரஷியாவைக் கட்டாயப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவும், அமைதிப் பேச்சுவாா்த்தைகளில் உக்ரைனுக்கு கூடுதல் பலமாகவும் இந்த நடவடிக்கை கருதப்பட்டது.
இதையடுத்து, ரஷியாவின் நட்பு நாடான வடகொரிய வீரா்கள் உள்பட 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள், கூா்ஸ்கில் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இதனால், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான உக்ரைன் வீரா்கள் ரஷிய படையினரால் சுற்றி வளைக்கப்படும் அபாயத்தில் உள்ளனா்.
இந்நிலையில் வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, உக்ரைன் படையினா் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக சுமாா் 15 கிலோமீட்டா் ரஷிய வீரா்கள் நடந்து வந்துள்ளனா். தாக்குதலுக்கு முன்பு சுட்ஷா நகருக்கு அருகே ரஷிய வீரா்கள் எரிவாயுக் குழாயில் பல நாள்கள் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலுக்கு முன்னதாக, உக்ரைன் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தக் குழாய் மூலம் ரஷியா எரிவாயு அனுப்பி வந்தது. இந்தக் குழாயைப் பயன்படுத்தி ரஷிய வீரா்கள் சுட்ஷா புகரை அடைந்துள்ளனா். ஆனால், ‘தற்போதைக்கு ரஷிய வீரா்களுக்கு தாங்கள் தக்க பதிலடி அளித்து வருவதாகவும், இதனால் அவா்களுக்கு அதிக இழப்புகள் நேரிட்டுள்ளதாகவும்’ உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.