ARTICLE AD BOX
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டாம். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட்டும் ஒன்றாக இருக்கிறது. இந்த மோசடி பணத்தை இழப்பவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மோசடி நபரையே தனது சமயோஜித புத்தி மூலம் மாற்றி, அவரிடமிருந்தே கான்பூர் இளைஞர் ஒருவர் பணத்தைக் கறந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அவர், பூபேந்திராவின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், வழக்கை முடிக்க லஞ்சம் கொடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த பூபேந்திரா, மோசடி செய்பவரை ஏமாற்ற ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை வகுத்தார்.
உடனே பதற்றமடைந்ததுபோல் நடித்த பூபேந்திர சிங், அந்த மோசடி நபரிடம், “மாமா, தயவுசெய்து என் அம்மாவிடம் சொல்லாதீர்கள். இல்லையெனில், நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வேன்” என்று கெஞ்சியுள்ளார். ”சரி, அப்படியெனில் ரூ.16,000 கொடு. நான் தீர்த்து வைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் பூபேந்திர சிங் ஒரு கதையை உருவாக்கியுள்ளார். ”தனது தாயின் தங்கச் சங்கிலி அடகில் இருப்பதால், வெறும் 3,000 ரூபாய் கொடுத்தால் அதனை மீட்டு மீண்டும் அடகு வைத்து நீங்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
மோசடி நபரும் பூபேந்திர சிங் சொல்வதை உண்மை என நம்பி, உடனடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ.3000 அனுப்பியிருக்கிறார். பின்னர், பூபேந்திர சிங்கை மீண்டும் அந்த மோசடி நபர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது பூபேந்திர சிங் வேறொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ”நாங்கள் அந்த தங்கச் சங்கிலியை அடகுவைத்தது ரூ.3,000த்திற்குத்தான். ஆனால், அதற்கு வட்டியாக ரூ.4,800 கட்டச் சொல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அந்த மோசடி நபரும் மீண்டும் அவர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். என்றாலும் இத்துடன் இந்த நாடகம் முற்றுப் பெறவில்லை. மீண்டும் அழைத்த மோசடி நபரிடம், “அந்த தங்கக் சங்கிலிக்கு ரு.1.10 லட்சம் வரை கடன் கொடுப்பார்கள். ஆனால், ரூ.3,000 செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அது என்னிடம் இல்லை. ஆகையால் இதையும் நீங்கள் தந்தால் மொத்தமாக எல்லாவற்றையும் தந்துவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் அந்த மோசடி நபர் அவர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். இப்படியே மோசடியாளரை கதைகதையாகச் சொல்லி ரூ.10,000 வரை ஏமாற்றி வாங்கியிருக்கிறார் பூபேந்திர சிங். இதன் பிறகுதான், பூபேந்திர சிங்கை ஏமாற்றப் போய் தாமே ஏமாந்திருப்பது அந்த மோசடி நபருக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோசடி நபர், பூபேந்திராவை போனில் அழைத்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் காவல் நிலையம் சென்று, மோசடி நபர் மீது புகார் அளித்துள்ளார். தவிர, அவரிடமிருந்து பெற்ற ரூ.10,000 பணத்தையும் ஏழை ஒருவருக்கு நன்கொடை அளிக்கும்படி தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.