ARTICLE AD BOX
சென்னை: சென்னை, தரமணியில் உள்ள, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். ஆர்.பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணி தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவராவார். மேலும், ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வு தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய ஆட்சி பணியில் 1984ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் – இந்திய தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறை செயலர், கூடுதல் தலைமை செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். 2018ல் பணிஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரை பொறுப்பு வகித்தார்.
இதுமட்டுமின்றி, திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளி பண்பாடு, தொல்தமிழ் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
The post உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.