ARTICLE AD BOX
உக்ரைன் மீது ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது இன்று (மார்ச் 23) அதிகாலை ரஷியா டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். அதிகாலையில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் சேதாரமானதுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கீவ் நகர ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் டினிப்ரோ மாவட்டத்திலுள்ள 2 குடியிருப்பு கட்டடங்களில் பற்றிய தீயினால் பெண் ஒருவரும், போடில் மாவட்டத்திலுள்ள 25 அடுக்கு மாடி கட்டடத்தின் 20 வது தளத்தில் ஏற்பட்ட தீயினால் மற்றொரு நபரும் பலியானதாக் கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!
முன்னதாக, ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த தாக்குதலானது தற்போது நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்ததிற்காக உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் அமெரிக்க பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் நீண்ட தூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.