ARTICLE AD BOX
செய்தியாளர்: ம. ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
தேவையில்லாத நடவடிக்கை:
தொகுதி சீரமைப்பு விவகாரம் மொழிக் கொள்கை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நாம் தமிழர் கட்சி தனியாக போராட உள்ளது. ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே கல்விக் கொள்கை போன்ற தேவையில்லாத நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு ஒற்றுமையடைந்துவிடும் வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையானது.
ஒருவர் இரண்டு பதவிகளுக்கு போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்:
தேர்தல்களில் சீர்திருத்தம் என்பது உலக நாடுகளில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இன்னமும், இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதை மாற்ற வேண்டும். தொகுதி சீரமைப்பு போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. மேலும் ஒருவர் இரண்டு பதவிகளுக்கு போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும். போன்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
நதி நீர் உரிமை விவகாரத்திலும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது:
இந்தியாவை ஆளுகின்ற எந்த கட்சியுமே தமிழ்நாடு என்றாலே ஒரு வெறுப்பு இருக்கிறது. இங்குள்ள வளங்களை வரிகளை எடுத்துக்கொண்டு இதற்கான உரிமைகளை தர மறுப்பது வாடிக்கையாகிவிட்டது. நதி நீர் உரிமை விவகாரத்திலும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. எனவே ஆட்சியாளர்களை வஞ்சித்து தேர்தல் களங்களில் வீழ்த்தும் அளவு விழிப்புணர்வு தமிழக வாக்காளர்களிடையே இன்னும் ஏற்படவில்லை.
இந்தியாவிலும் நிச்சயம் புரட்சி வெடிக்கும்:
என்றைக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் கருணாநிதி அமர்ந்தாரோ அன்றிலிருந்து தீய ஆட்சியின் காலம் தொடங்கிவிட்டது. எனவே இதற்கு முற்றிலுமான தீர்வு ஏற்படுத்த வேண்டுமானால் புரட்சி ஒன்றினால் மட்டுமே நாட்டை வளப்படுத்த முடியும். எப்படி இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளில் புரட்சி ஏற்பட்டதோ அதேபோல நமது இந்தியாவிலும் நிச்சயம் புரட்சி வெடிக்கும்” என்று சீமான் தெரிவித்தார்.