ARTICLE AD BOX
நாடு முழுவதும் இன்று(மார்ச் 20) நடைபெறவிருந்த ரயில்வே (உதவி லோகோ பைலட்)தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 19, 20 தேதிகளில் இரண்டாம் நிலை கணினித் தேர்வு(CBT 2) நடைபெறவிருந்தது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று(மார்ச் 19) நடைபெறவிருந்த இரண்டு ஷிப்ட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இன்று நடைபெறவிருந்த முதல் ஷிப்ட் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வே உதவி லோகோ பைலட் சிபிடி -2 தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! ராகுல் சந்திப்பு!!

இந்த தேர்வுக்கு, தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் அல்லாமல் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரயில்வே தேர்வு வாரியமும் இதற்கு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக தேர்வர்கள் தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு நேற்று தேர்வு எழுதச் சென்ற நிலையில் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.