ARTICLE AD BOX
இன்றைய நவீன காலத்தில் திருமண விழாக்கள், பிறந்தநாள் என ஒவ்வொரு விழாக்களுக்கும், பெண்கள், விதவிதமாக அணியும் உடைக்கு ஏற்ப அழகாக இருக்க நகைகளை அணிகின்றனர்.
இவர்கள் இதை அணிந்தால் அழகாக இருக்கும் என சில பொதுவாக விதிகள் உண்டு. இதை தாண்டி, சில நகைகளை பார்க்கும் போது, 'இது சூப்பரா இருக்கே!' என உங்களுக்கு தோன்றும். அதன்பின், 'இது எனக்கு பொருந்துமா?' என்றெல்லாம் யோசிக்காதீர்கள். வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.
இரு வேறு விதமான நகைகளை எப்போதும் சேர்த்து அணியக்கூடாது.
வெள்ளி, தங்க நகைகளை ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் அணிவது இரண்டையுமே பாதிக்கும்.
ஒரு கையில் வாட்ச், இன்னொரு கையில் பிரேஸ்லெட் என அணியும் போது இரண்டும் வண்ணத்திலும் தடிமனிலும் பொருத்தமாக இருக்கிறதா? எனப் பார்த்து, இல்லாவிட்டால் பிரேஸ்லெட் அணியும் போது வாட்சை தவிர்த்து விடலாம்.
வெள்ளி, பிளாட்டினம் நகைகள் அதிகம் அணியும் போது நீலம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும்.
தங்க நகைகள் மற்றும் கற்கள் பதித்த நகைகளுக்கு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும்.
ஜீன்ஸ், ஸ்கர்ட் என நாகரிக உடைகளை அணிந்தால் பெரிய நகைகளை அணிவதை விட மெல்லிய செயின், சின்ன ஜிமிக்கிகள் எனப் போட்டால் பொருத்தமாக இருக்கும்.
பாரம்பரிய நகைகள் அணிவதாக இருந்தால் பாரம்பரிய புடவைகளான பட்டுப் புடவை, சில்க் காட்டன் என உடைகளை அணிந்தால் வித்தியாச தோற்றத்தை காட்டும்.
நிறைய வேலைப்பாடுகள் கொண்ட டிசைனர் சேலைகள், லெஹங்கா, சல்வார் உடைகள் அணியும் போது கற்கள் பதித்த வளையல்கள் அணிந்தால் உங்களது தோற்றத்தை உயர்த்தும்.
சின்னதாக பூ டிசைனில் இருக்கும் டாலர் பதித்த மெல்லிய செயின்கன் ஆடம்பரமில்லாத எளிய விருந்துகளுக்கு அணிந்து செல்லலாம்.
இன்றைய இளம் பெண்கள் பொதுவாகச் சிறிய ஸ்டட்கள், சிறு கற்கள் பதித்த நகைகள் மெல்லிய சங்கிலி கொண்ட சிறு பெண்டென்ட் போன்றவற்றை அணியலாம்.
உயரமான பெண்கள் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. அகலமான நெக்லஸ், குண்டு ஜிமிக்கி கம்மல் என கம்பீர தோற்றம் தரும் நகைகளை அணியலாம்.
திருமணத்தில் அணியும் பட்டுப் புடவைக்கு மேட்ச்சாக பாரம்பரிய டிசைன் நகைகளை தேர்வு செய்து வாங்கி அணியலாம்.
ஒருவரின் வயதுக்கும் அணியும் நகைகளுக்கும் தொடர்பு உண்டு. வயதானவர்கள் அளவில் சின்ன சைஸ் நகைகளை அணியலாம். வயதில் சிறியவர்கள் பெரிய மற்றும் நடுத்தர அளவுள்ள நகைகளை அணியலாம்.
குழந்தைகளுக்கு தங்க நகை அணிவதை தவிர்க்க வேண்டும். எந்த விழாவானாலும் குழந்தைகளின் ஆடைகளில், நகை போடுவதில், கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.