ARTICLE AD BOX
கிட்டத்தட்ட வாழ்வா? சாவா? போட்டிதான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு.. ஏனெனில், தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவியிருந்தன. மீதமுள்ள இரு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால்கூட தொடரிலிருந்தே வெளியேற வேண்டியதுதான். இத்தனை நெருக்கடியான சூழலில் நடந்தது, குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த 8ஆவது லீக் போட்டி.
லாகூர் கடாஃபி மைதானத்தில் நடந்த மோதலில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டாஸ் குறித்து பேசியிருந்த ஆஃப்கன் கேப்டன் ஹஸ்மதுல்லா, “இரண்டாவது இன்னின்ஸில் ஆடுகளம் சுழலுக்கு உதவும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.. ஏனெனில், ரஷித் கான், நூர் அகமது மற்றும் முகமது நபி என மும்முனை சுழல் தாக்குதலோடு இருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. அதேசமயம் மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் சிறப்பாக இல்லை. டாஸ் தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர், “டாஸ் வென்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும் போட்டி” எனத் தெரிவித்தார்.
ஆம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் ஆஃப்கன் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்கள் தொடர்ச்சியாக விழுந்தது. ஆர்ச்சர் முக்கிய பேட்டர்களான குர்பாஸ், அடல், ரஹ்மத் போன்றோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்து திணறியது ஆஃப்கன் அணி. ஆனால், களத்தில் இருந்த இப்ராஹிம் எந்தப் பதற்றமும் இன்றி ஆட்டத்தினைத் தொடர்ந்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் 40 ரன்களில் வெளியேறினாலும், ஓமர்சாய் நபியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த இப்ராஹிம் அணியை மொத்தமாகவே சரிவிலிருந்து மீட்டார்.
இப்ராஹிம்மின் அதிரடியால் இறுதி 9 ஓவர்களில் மட்டும் ஆஃப்கானிஸ்தான் அணி 108 ரன்களைக் குவித்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 325 ரன்களை எடுத்தது. கிட்டத்தட்ட இறுதிவரை களத்தில் நின்ற இப்ராஹிம் 146 பந்துகளில் 177 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஆஃப்கன் அணிக்காக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகவும் இது அமைந்தது.
326 எனும் இமாலய இலக்கினைக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்குத் தொடக்கம் அத்தனை சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் பில் சால்ட், ஆறாவது ஓவரில் ஸ்மித் என அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர். பின் ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க முனைந்தனர். ஆனால், 38 ரன்களில் டக்கெட் வெளியேற, பின் வந்த ஹேரி ப்ரூக், ஜாஸ் பட்லர் போன்றோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறு சிறு பார்ட்னர்ஷிப்புகள் தொடர்ந்து அமைந்தாலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதுதான் ஆஃப்கானிஸ்தானை மீண்டும் மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டுவந்தது. ஆனால், ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்கின் போது சிறு சிறு பார்ட்னர்ஷிப்புகள் அமைந்ததுதான் பெரும் பலமாக அமைந்தன.
இறுதியில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 317 ரன்களை மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான், வங்கதேசம் வரிசையில் தற்போது இங்கிலாந்து அணியும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஆஃப்கானிஸ்தான் அணியோ இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது. வரும் 28ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி..