ARTICLE AD BOX
செய்தியாளர்: வெ.செந்தில் குமார்
அரியலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கனகவள்ளி என்பவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில் குமரவேலு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 25 சவரன் நகை, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் திருமணச் செலவில் பாதி தொகையான 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில் குமரவேலு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கனக வள்ளியை துன்புறுத்தியதோடு அவரை தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கனகவள்ளியின் தந்தை ராஜேந்திரன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் இதையடுத்து தனது தந்தையின் சாவுக்கு நான் தான் காரணம் என கனகவள்ளி, தனது உயிரிழப்பிற்கு கணவனும் அவர்கள் குடும்பத்தாரும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கனகவள்ளியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கனகவள்ளியின் கணவர் செந்தில் குமாரவேலு அவரது அம்மா கலாவதி அண்ணன் முருகன் மற்றும் அரிகிருஷ்ணவேலு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர் இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், விசாரணையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமான செந்தில் குமாரவேலு அவரது அம்மா கலாவதி, அண்ணன் முருகன் மற்றும் அரிகிருஷ்ணவேலு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் 8 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.