ARTICLE AD BOX
மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் மதுரை மண்டலங்களில் இயங்கும் பல்வேறு கோட்டங்களில் பேருந்து கட்டணம் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு பயணிக்கின்றனர். தற்போது, திருச்செந்தூர்-மதுரை இடையே ரூ.172, தூத்துக்குடி-மதுரை இடையே ரூ.133 என பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக இடைப்பட்ட நிறுத்தங்களில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில வழித்தடங்களில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் வெளிப்படுத்திய முக்கிய புகார்கள்:
திருச்செந்தூர் – ஆத்தூர்: ₹17 → ₹20
ஆறுமுகநேரி – ஸ்பிக் நகர்: ₹20 → ₹25
ஆத்தூர் – ஸ்பிக் நகர்: ₹15 → ₹20
தூத்துக்குடி – எப்போதும்வென்றான்: ₹23 → ₹30
தூத்துக்குடி – எட்டயபுரம்: ₹41 → ₹50
மேலக்கரந்தை – மண்டேலா நகர்: ₹61 → ₹65
மேலக்கரந்தை – மாட்டுத்தாவணி: ₹75 → ₹80
அரசு போக்குவரத்துக் கழகம் பராமரிப்பு செலவுகள் காரணமாக கட்டண உயர்வு அவசியம் எனக் கூறினாலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, பழைய கட்டண நிலையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.