ARTICLE AD BOX
போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளர்.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மதிப்பில் போதை பொருள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இவருக்கு ஜாமீன் வழக்க கூடாது என்றும், அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில், ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், இயக்குனர் அமீர் உட்பட, 12 பேர் மீது, 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஜாபர் சாதிக் பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வந்த 8 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கடந்த மாதம் இயக்குனர் அமீர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதைப்பொருள், கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதைப்பொருள் விற்பனை மூலம் வந்த பணத்தை, இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
அதேபோல் போலி நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனத்தின் பெயர்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளிலும் பணத்தை செலுத்தி வந்துள்ளதாகவும், அவர் வெளியில் வந்தால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை, வரும் மார்ச் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அமீர் இயக்கிய இறைவன் மிக பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.