ARTICLE AD BOX
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய இளைஞரால் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ‘துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவார்’ என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் அவினாசி - அத்திக்கடவு திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்காக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முயற்சி எடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அரசியல் சார்பில்லாமல் நடைபெற்ற இந்த விழாவில், அ.தி.மு.க கட்சிக் கொடிகளோ, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களோ இடம் பெறவில்லை. இந்த நிகழ்ச்சியில், அந்த பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை, அதனால், பங்கேற்கவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அ.தி.மு.க நிகழ்ச்சியில், கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள் என்று பேசினார். இதனால், செங்கோட்டையன் பற்றிய பூசல் அதிமுக-வில் புகைந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய இளைஞரால் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று (மார்ச் 5) ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ-வுமான செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்தியூர் பகுதி அ.தி.மு.க பிரமுகர் பிரவீன் என்பவர் எழுந்து நின்று ‘எங்களுக்கு இந்தக் கூட்டம்’ குறித்து எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை’ என்று கூறி கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு, செங்கோட்டையன் ‘எது பேசுவதாக இருந்தாலும் மேடைக்கு வந்து பேசுங்கள். அங்கிருந்து பேச வேண்டாம்’ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த பிரவீன் மேடை அருகே வந்து செங்கோட்டையன் மற்றும் செல்வராஜ் உடன் பேசிக்கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் பிரவீனை தடுத்து நிறுத்தி அவரை கீழே தள்ளி தாக்க முயன்றனர். இதனால், மேடையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பிரவீன் மண்டபத்தில் இருந்து தப்பி வெளியே சென்றார். அவரை அ.தி.மு.க நிர்வாகிகள் விரட்டிச் சென்றனர். இதனால் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் பரபரப்பாக இருந்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “எங்கள் மாவட்டத்தில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், குழப்பத்தை விளைவித்து விளம்பரத்துக்காக ஒரு சிலர் இதுபோன்று செய்கின்றனர். ரகளையில் ஈடுபட்ட நபர் கட்சி உறுப்பினரே கிடையாது. அந்த நபர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன், வீட்டு அருகே வசித்து வருகிறார். குழப்பத்தை விளைவிக்க அந்த நபரை, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் தான் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார். துரோகிகளுக்கு இறைவன் பெரிய தண்டனை கொடுப்பார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணமே ராஜா கிருஷ்ணன் தான். அவர் தேர்தலில் அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வேலை செய்தார் என்கிற ஆதாரம் என்னிடம் உள்ளது. இங்கு நடந்தது கட்சி நிர்வாகிகள் கூட்டம் தானே தவிர உறுப்பினர்கள் கூட்டம் இல்லை. இருந்தாலும் இந்த தவறை செய்த நபரை நாங்கள் மன்னிக்கிறோம். லட்சியம் உயர்வாக இருந்தால்தான் பாதை தெரியும். வெற்றி உறுதியளிக்கும்” என்று கூறினார்.