ARTICLE AD BOX
கரண் ஜோகர் தயாரிப்பில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் `நதானியான்'. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலி கான் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `நதானியான்'. இப்படத்தில் அவருடன் நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் நடித்திருக்கிறார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இப்படத்திற்கு கிடைக்கும் காட்டமான விமர்சனங்கள் பற்றி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் கரண் ஜோகர்.

அவர் பேசுகையில், ``என்னைப் பற்றி தெரிந்த மக்களுக்கு எனக்கும் திரைப்பட விமர்சகர்களுக்கு இடையே இருக்கும் உறவு பற்றி தெரியும். அவர்கள் எழுதுவதை பொறுத்து இந்த உறவு மாற்றம் பெறாது. இது அவர்களுடைய வேலைதான். அவர்கள் ஒரு படத்தை கீழே இறக்க வேண்டும் என குறிக்கோளுடன் சுற்றுவதாக நான் கட்டுக்கதைகளை சொல்லவே மாட்டேன். ஒரு விமர்சகர் இப்படத்தை நான் உதைக்க வேண்டும் என எழுதியிருக்கிறார். இப்படியான வகைகளில் நீங்கள் எழுதும்போதுதான் எனக்கு பிரச்னை எழுகிறது. இது என்னை தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் அறிவார்ந்த திரைப்பட விமர்சகர்களுக்கு இரக்கமுள்ள ஒரு பக்கம் இருக்கும். யாரும் இங்கு உதைக்கப்பட வேண்டாம். உதைப்பது வன்முறையான விஷயம். நிதர்சன உலகத்தில் இந்த வார்த்தை வன்முறைக்கு நேரானது." எனப் பேசியிருக்கிறார்.