ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற இருக்கும் போட்டியுடன் தொடங்குகிறது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற இருக்கும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது நான்காவது சீசனில் களமிறங்குகிறது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் புதிய வீரர்களை விலைக்கு வாங்கியிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் புதிய அணியாக ஐபிஎல் 2025 சீசனில் களமிறங்குகிறது. இந்த சீசனில் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பந்த், இந்த சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக திகழ்கிறார்.
கடந்த சீசன் வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு விளையாடி வந்த பந்த், இந்த சீசனில் முதல் முறையாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயணம்
கடந்த 2022 ஐபிஎல் சீசனில் புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சேர்க்கப்பட்ட மற்றொரு அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளது. முதல் சீசனில் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல், ஆலோசகராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டனர். லக்னோ நகரில் அமைந்திருக்கும் ஏகானா ஸ்டேடியம் இந்த அணியின் உள்ளூர் மைதானமாக உள்ளது.
இளம் வீரர்கள், அனுபவ வீரர்கள் என கலவையான அணியாக இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்று எலிமினேட்டர் சுற்று வரை முன்னேறியது. கேஎல் ராகுல் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
இதைத்தொடர்ந்து 2023 சீசனிலும் கேஎல் ராகுல் கேப்டனாக தொடர்ந்தார். இந்த முறையும் சிறப்பாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மீண்டும் எலிமினேட்டர் சுற்று வரை தகுதி பெற்றி தோல்வியுடன் வெளியேறியது. லீக் சுற்றில் 8 போட்டிகளை வென்றிருந்தது.
தொடர்ந்து இரண்டு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் எலிமினேட்டர் போட்டிகளில் நாக் அவுட்டாகி வெளியேறும் அதிர்ஷ்டமில்லாத அணியாக திகழ்ந்தது.
கடந்த 2024 சீசனிலும் கேஎல் ராகுல் கேப்டனாக தொடர்ந்தார். இந்த முறையும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ப்ளேஆஃப் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. மொத்தம் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது.
லக்னோ அணியின் ஸ்டார் வீரர்கள்
லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கேஎல் ராகுல் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் ஐபிஎல் 2025 தொடருக்காக நடந்த ஏலத்தில் பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த் புதிய கேப்டனாக மாறியுள்ளார்.
இந்த சீசனில் லக்னோ அணியின் ஸ்டார் வீரர்களா ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரான், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ஷமர் ஜோசப், பிஷ்னோய் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் புதிய ஆலோசகர் ஆனார் ஜாகீர் கான்
Consistent ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் அணியாக இருந்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. லக்னோ புதிய கேப்டன் ரிஷப் பந்த், தான் கேப்டனாக பொறுப்பு வகித்த முந்தைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறார்.

டாபிக்ஸ்