ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ, பி என பிரித்து நடத்தப்பட்ட போட்டிகளில் “இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து” என 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம் முதலிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறியிருக்கும் நிலையில், 2 அரையிறுதிக்கான போட்டியாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது.
இந்த சூழலில் நாளை நடக்கவிருக்கும் வாழ்வா, சாவா போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதியாக மோதிய 2023 ஒருநாள் உலகக்கோப்பையில், வெற்றியின் அருகிலிருந்த ஆப்கானிஸ்தான் அணியை மேக்ஸ்வெல் தனியொரு ஆளாக தோல்விக்கு அழைத்துச்சென்றார்.
அதற்குபிறகு சிறந்த கிரிக்கெட்டை விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி, தொடர் வெற்றிகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை தழுவியிருந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா அணி கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் காலடி வைத்தது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 4 முறை மோதியுள்ளன, அதில் 4 முறையும் ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற்றுள்ளது.
அணியின் பலத்தை பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தான் அணி ஒட்டுமொத்தமாக பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. அவர்கள் ஒரு அணியாக அனைத்து ஏரியாவிலும் சரியாக செயல்பட்டால் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறனை கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அனுபவமில்லாத வீரர்களே அதிகம் இருந்தாலும், அவர்களிடம் கேம் சேஞ்சராக ஏதாவது ஒரு வீரர் ஜொலித்துவிடுகிறார். அந்த ஒருவீரரிடமிருந்து ஆப்கானிஸ்தான் எப்படி தப்பிக்க போகிறது என்பதே நாளை போட்டியின் முக்கிய அம்சமாக இருக்கப்போகிறது.