<p> </p>
<p>ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர். ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை. 58 வயதான ரஹ்மானுக்கு காலை 7.30 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருதய துறையை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையான பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அதனடிப்படையிலேயே அடுத்தகட்ட சிகிச்சை அளிப்பது மற்றும் எப்போது அவர் வீடு திரும்புவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.</p>
<p>ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதோடு, எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி சர்வதே திரையுலகின் கவனம் ஈர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ்சினிமா இசையில் புரட்சியை ஏற்படுத்தி, புதுமையை புகுத்தி ரசிகர்களால் “பெரிய பாய்” என வாஞ்சையோடு அழைக்கப்படுகிறார். நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து, தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். தற்போதும் இவர் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அண்மமையில் தான் இவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>