ARTICLE AD BOX
மெயின்புரி: உபி மாநிலம் மெயின்புரி மாவட்டம் ஜேஸ்ரானா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட டெஹூலி கிராமத்தில் ஏராளமான தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 1981ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சந்தோஷ் ஷா, ராதே ஷியாம் ஆகியோர் தலைமையிலான 17 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து, அங்கிருந்த தலித் குடும்பங்களை குறி வைத்து பயங்கர துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பிறந்து 6 மாதங்களேயான குழந்தை, 2 வயதான குழந்தைகள், பெண்கள் உள்பட 24 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பொருள்களையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில சந்தோஷ் ஷா என்ற சந்தோஷ் சிங், ராதே என்ற ராதே ஷியாம் உள்பட 17 கொள்ளையர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு இடையே குற்றம்சாட்டப்பட்ட 17 கொள்ளையர்களில் சந்தோஷ் சிங், ராதே ஷியாம் உள்பட 14 பேர் இறந்து விட்டனர். 44 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர கொலை வழக்கில் கப்டன் சிங்(60), ராம் பால்(60) மற்றும் ராம் சேவக்(70) ஆகிய மூன்று பேரையும் குற்றவாளிகள் என கடந்த 12ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தண்டனை விவரங்களை ஒத்தி வைத்தது. குற்றவாளிகள் கப்டன் சிங், ராம் பால் மற்றும் ராம் சேவக் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
The post 24 தலித்துகள் படுகொலை உ.பியில் 3 பேருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.