ARTICLE AD BOX
மகாராஷ்டிரத்தில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய மருத்துவருக்கு தாணே மாவட்ட நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தாணேவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 அன்று மருத்துவர் ஒருவர் தவறான வழியில் தனது காரை நிறுத்தியதினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் அந்த மருத்துவரின் ஓட்டுநர் உரிம அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் மறுத்ததுடன், அந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?
இதனைத் தொடர்ந்து, அந்த மருத்துவரின் மீது கோப்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது கடந்த மார்ச் 1 அன்று தாணே மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வசுதா எல் போஸலேவின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது, ஆஜரான நான்கு சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் தற்போது 43 வயதாகும் அந்த மருத்துவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ.5,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பின் நகலானது இன்று (மார்ச் 4) வெளியிடப்பட்டுள்ளது.