ARTICLE AD BOX
குத்துச்சண்டைக்கு வலிமை மட்டும் போதாது, தந்திரமும், சாமர்த்தியமும் வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சி...
1698 ஆம் ஆண்டில் ஒரு நாள், ரஷ்ய நாட்டை ஆண்ட மகா பீட்டர் என்னும் மாமன்னர் ராஜ தந்திர உறவின் நிமித்தம் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். கூடவே ஆள், அம்பு, அணிவகுப்பும் சென்றது.
அப்போது லண்டனில் மிகவும் புகழ்பெற்ற ஆட்டமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை காணும் வாய்ப்பும் மன்னனுக்கு கிட்டியது. குத்து சண்டையின் வேகத்திலும், விவேகத்திலும் மன்னனின் மனம் லயித்து போய் விட்டது. போட்டியை மிகவும் ரசித்தார். போட்டி முடிந்து தன் இருப்பிடம் வந்து சேர்ந்த பிறகும் அந்த குத்துச்சண்டை போட்டியை பற்றிய நினைவு மனதில் ரீங்காரமிட்டதே ஒழிய மன்னன் நினைவை விட்டு மறைந்து போய் விடவில்லை. மாறாக வளர்ந்து கொண்டே வந்தது.
உடனே மன்னன் தனது மெய்காப்பாளர்களையும், மற்றவர்களையும் அழைத்து தான் பார்த்த குத்துச்சண்டை போட்டியை விளக்கினான். 'உங்களில் யாராவது ஒருவன் இங்கே உள்ள குத்துச்சண்டை காரருடன் போட்டியிட்டு உங்கள் திறமையை, வலிமையைக் காட்ட முடியுமா?' என்று கேட்டான். இங்கிலாந்து நாட்டு வீரனுக்கு ரஷ்ய நாட்டு வீரன் எளிதானவன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மன்னனுக்கு தோன்றிற்று.
காவலர்களிலே ஒருவன் அரசனின் ஆவலைத் கண்டு தான் போட்டியிடுவதாக ஏற்றுக் கொண்டான். இதை தொடர்ந்து சீமார்க்யூஸ் கார்மதன் என்று அழைக்கப்படுகின்ற மாளிகைத் தோட்டத்தில் உள்ள ஓரிடத்தில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
லண்டனில் உள்ள முக்கியமான பிரபுக்களும் பல முக்கியஸ்தர்களும் போட்டியை காண வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. மகாபீட்டரும் அவரது பரிவாரங்களுடனும், மெய்காப்பாளர்களுடனும் மிக ஆவலுடன் போட்டியின் முடிவை காண அமர்ந்திருந்தான். போட்டி தொடங்கி விட்டது. இங்கிலாந்து வீரன் தன்னுடன் மோத வா! என்று சவால் விடும் பாணியிலே ரஷ்ய வீரனை சத்தம் போட்டு அழைத்தான். ஆனால், ரஷ்ய வீரனோ தனது தந்திர பாணியிலே முன்னுக்கு வராமல் இருந்த இடத்தில் இருந்து, பயந்தவனாக பாவனை செய்து சமயம் நோக்கி காத்திருந்தான்.
முன்னுக்கு வராமல் இருந்ததை பார்த்த இங்கிலாந்து வீரன் ‘எதிரி பயந்து விட்டான்' என்று திமிராக எண்ணிக் கொண்டான். தன்னை மிகவும் பலசாலி மகாவீரன் என்றும் கருதிக் கொண்டான். ஆகவே தானே அவன் இருக்குமிடம் ஓடி வந்து தாக்குதலை தொடங்கி விட்டான். இந்தக் குத்துச்சண்டை போட்டியிலே கைகளால் முகத்தில் மட்டும்தான் குத்தலாம் என்பதில்லை. தலையால் மார்பிலே மோதலாம், இடிக்கலாம், தள்ளலாம் என்ற விதியும் அந்த நாளில் இருந்து வந்தது. எனவே, இங்கிலாந்து வீரன் இதுதான் சமயம் என்று கருதி ஓடி வந்து ரஷ்ய வீரன் மார்பிலே மோதி தள்ள முயன்றான்.
தன் மார்பிலே அவன் மோத வருகிறான் என்று உணர்ந்து கொண்ட ரஷ்ய வீரன் சற்று ஒதுங்கி திடீரென்று அவன் கழுத்தை தனது வலிய கைகளுக்கிடையில் வைத்து கொண்டு ஓங்கி குத்தினான். தாக்குதலினால் நிலை குலைந்து அடி தாங்க முடியாமல் கை கால்களை பரப்பிக் கொண்டு இங்கிலாந்து வீரன் கீழே விழுந்தான்.
குத்துச்சண்டைக்கு வலிமை மட்டும் போதாது தந்திரமும், சாமார்த்தியமும் வேண்டும் என்பதை உணர்த்தி வெற்றி பெற்ற ரஷ்ய வீரனை பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்டி சந்தோசப்படுத்தினார்கள். அவன் சாதுர்யத்தைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். தனது வீரனின் வெற்றியைப் பாராட்டிய மகாபீட்டர் மகிழ்ச்சியில் மூழ்கினான்.
மன்னன் தன்னைப் போலவே தனது மக்களும் வலிமை உடையவர்களாக விளங்க வேண்டும் என்று விரும்பினார், ஊக்குவித்தார், உற்சாகப் படுத்தினார், பாராட்டினார், மனம் போல பரிசளித்தார்.