ARTICLE AD BOX
மதுரை - மல்லிக்கு மட்டும் பேமஸ் இல்லீங்க... விதவிதமான உணவுகளுக்கும் தான். மதுரை ஸ்பெஷல் உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மதுரையில் இனிப்பு மற்றும் வெண்ணெய் சுவையின் சுவாரஸ்யமான கலவையில் செய்யப்படும் பன் பட்டர் டோஸ்ட் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும்.
நீங்கள் இதை முதல் கடி கடித்தவுடன் உங்கள் வாயில் உருகும் இனிப்பும், வெண்ணெயின் சுவையும் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது 10 நிமிடங்களுக்குள் தயார் செய்து விடலாம். இதை சூடான காபி அல்லது டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த செய்து கொடுத்தால திரும்ப திரும்ப கேப்பாங்க. வாங்க இன்று மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஃபிரஷான பன் - 1
காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கப்
நாட்டு சர்க்கரை - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை :
* பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
* வெட்டிய பன்னின் ஒரு பகுதியில் வெண்ணெய் தடவி அதன் மேல் நாட்டு சர்க்கரையை உங்கள் விருப்பம் போல் தூவி கொள்ளவும்.
* அதே போல் மற்றொரு பாதியிலும் வெண்ணெய் தடவி நாட்டு சர்க்கரையை தூவி இரண்ரையும் ஓன்றாக மூடவும்.
* மூடிய பன்னில் மேல் மறுபடியும் வெண்ணெய் தடவி நாட்டுச்சர்க்கரையை தூவ வேண்டும்.
* இப்போது ஒரு ஃப்ரையிங் பேனை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பன்னை வைத்து சுற்றி அரை கப் பால் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலில் பன் வேகும் படி சுற்றி விடவும்.
* பன் மிருதுவாக மாறி, பால் வற்றியதும் எடுத்து சுடச்சுட தட்டில் வைத்து அதன் மேல் சிறிது வெண்ணெய், சர்க்கரை தூவி பரிமாறவும்.
குறிப்பு :
மதுரை பன் பட்டர் டோஸ்ட் செய்யும் போது, புதிதாக தயாரிக்கப்பட்ட பன்னை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பன் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கிறதோ, பன் பட்டர் டோஸ்ட் அவ்வளவு மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி டோஸ்ட் மிகவும் சுவையாகவும் இருக்கும். அதேபோல் வெண்ணெய் அதிகம் சேர்த்து கொண்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த டோஸ்டை பிச்சி வாயில் போட்டவுடன் அப்படியே வழுக்கிக்கொண்டு வயித்துக்கு போயிடும்.