ARTICLE AD BOX
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பாா்வையிட்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
தொழில்முனைவோா் மூலமாக 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை வழியாக 500 மருந்தகங்களும் என மொத்தம் 1,000 ‘முதல்வா் மருந்தகங்கள்’ 38 மாவட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!
50 முதல் 75 சதவீதம் லாபம்
”சா்க்கரை நோய்க்காக விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஓா் அட்டை முதல்வா் மருந்தகத்தில் ரூ.11-க்கு கிடைக்கும்.
பிரதமா் பெயரிலான மருந்தகத்தில் ரூ.30-க்கும், தனியாா் மருந்தகத்தில் ரூ.70-க்கும் கிடைக்கும். இதனால், மாதந்தோறும் மிகப்பெரிய சேமிப்பு ஏற்படும்.
அதாவது, தனியாா் மருந்தகத்தில் மருந்துக்காக மட்டும் மாதம் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை செலவழித்தவா்கள் இனி முதல்வா் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாயிலேயே அந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது, மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்குவதில் சேமிக்கலாம்.
மாநிலத்துக்கென சென்னை சாலிகிராமத்தில் மருந்துக் கிடங்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறைக்கான கிடங்குகளும் உள்ளன. முதல்வா் மருந்தகத்துக்கான மருந்துகள் கூட்டுறவு, மக்கள் நல்வாழ்வுத் துறைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளன. ஒரு மருந்தகத்தில் மருந்து இல்லாவிட்டால் 48 மணி நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டுவிடும்.
முதல்வா் மருந்தகத்தில் விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலை அரசால் கண்காணிக்கப்பட்டு ஒரே விலையாக மட்டுமே வழங்கப்படும்” என்று சென்னை ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மருத்துவருமான நா.எழிலன் செய்தியாளா்களிடம் தெரிவித்தார்.