ARTICLE AD BOX
Published : 19 Mar 2025 08:42 AM
Last Updated : 19 Mar 2025 08:42 AM
அமைச்சர் பொன்முடி வழியில் சி.வி.சண்முகம்... பாதுகாப்பான தொகுதிக்கு மாறத் திட்டமா?

அமைச்சர் பொன்முடியைப் பின்பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும் 2026 தேர்தலில் பாதுகாப்பான தொகுதிக்கு இடம் மாறுகிறார் - தற்போது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். திக பேச்சாளராக இருந்த பேராசிரியர் க.தெய்வசிகாமணி என்கிற பொன்முடியை உட்கட்சி புகைச்சலை சமாளிப்பதற்காக 1989-ல் விழுப்புரம் தொகுதியில் நிறுத்தியது திமுக தலைமை.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான அப்துல் லத்தீபை சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பொன்முடி. அடுத்த தேர்தலில் ராஜீவ் அலையால் விழுப்புரத்தில் பொன்முடியால் ஜெயிக்க முடியாமல் போனது. அதேசமயம், 1996-ல் அதே விழுப்புரத்தில் சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-வை வீழ்த்தினார். 2001, 2006 தேர்தல்களிலும் விழுப்புரத்தை தக்கவைத்த பொன்முடி, 2011-ல் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விழுப்புரத்தைப் பறிகொடுத்தார்.
இதையடுத்து 2016 தேர்தலில், தனது சொந்த கிராமமான டி.எடையாரை உள்ளடக்கிய திருக்கோவிலூர் தொகுதிக்கு பாதுகாப்பாக மாறிக் கொண்டார் பொன்முடி. இனியும் விழுப்புரத்தில் வன்னியரான சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதாலேயே பொன்முடி இந்த முடிவை எடுத்ததாகச் சொல்வார்கள்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக திருக்கோவிலூர் தொகுதியில் வென்றுள்ள பொன்முடி, 2021 தேர்தலில் பாஜக வேட்பாளர் கலிவரதனை சுமார் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், தேர்தலில் சுலபமாக ஜெயிப்பதற்காக தொகுதியை மாற்றிக் கொண்ட பொன்முடிக்கு விழுப்புரத்தை விட்டுப் போன பிறகு கட்சிக்குள் முன்பிருந்த அதிகாரங்கள் குறைந்து போனதும் மறுக்கமுடியாத உண்மை.
ஒரு காலத்தில் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கே செயலாளராக இருந்தவர் பொன்முடி. இப்போது, துணைப் பொதுச்செயலாளர் அந்தஸ்தில் இருந்தாலும் மாவட்ட அரசியலில் பொன்முடிக்கு பழைய அதிகாரங்கள் இல்லை என்பது தான் நிதர்சனம். பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக இருக்கிறார். அதிலும் திருக்கோவிலூர் தொகுதி அமைச்சர் எ.வ.வேலுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இப்படியான சூழலில், அமைச்சர் பொன்முடிக்கு வந்த அதே சிந்தனை இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 2001, 2006 தேர்தல்களில் திண்டிவனத்தில் வென்ற சி.வி.சண்முகத்துக்கு, 2011, 2016 தேர்தல்களில் விழுப்புரத்தில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அங்கும் வென்று காட்டிய சண்முகம், 2021-ல் மீண்டும் விழுப்புரத்தில் களமிறங்கினார்.
இவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த திமுக தலைமை, அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை விழுப்புரத்தில் நிறுத்தியது. வன்னியரான லட்சுமணன், சி.வி.சண்முகத்தை சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதே லட்சுமணனுக்கு தற்போது விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் உள்வாங்கி இருக்கும் சி.வி.சண்முகம் இனியும் லட்சுமணனுடன் மோதி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் தனது சொந்த கிராமமான ஔவையார் குப்பத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாறும் யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சண்முகம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும் பகுதியை மயிலம் தொகுதிக்கே ஒதுக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள்.
அதிமுக-வில் இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியலில் இருக்கும் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார். மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தை விட்டுவிட்டு இவரும் பாதுகாப்பான இடம் தேடி மயிலம் பக்கம் ஒதுங்கும் பட்சத்தில், தொகுதி மாறியதால் பொன்முடிக்கு ஏற்பட்ட அரசியல் சறுக்கல்களையும் கொஞ்சம் அசைபோட்டுக் கொண்டால் நல்லது என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்!
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை